NATIONAL

One Nation One Election | மக்களவையில் இன்று தாக்கலாகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 20-ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் சூழலில், நேற்றே 2 மசோதாக்களையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்வார் என செய்தி வெளியான நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான 2 சட்ட மசோதாக்களை சட்ட அமைச்சர் அறிமுகப்படுத்தி தாக்கல் செய்வார் என்று நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையும் படிக்க: காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு - திட்டக் குழு அறிக்கை! அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதா மீதான விவாதம், மக்களவையில் அமளியின்றி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை ஆபத்துமிக்க ஒற்றை ஆட்சி முறைக்கு கொண்டு செல்லும் என்றும், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை அழித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். கூட்டாட்சி முறைக்கு எதிரான, நடைமுறையில் சாத்தியமில்லாத இந்த திட்டத்தை இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். #INDIA will resist the anti-federal & impractical “One nation one election” as it will push the country into the perils of unitary form of governance, killing its diversity and democracy in the process. The Union BJP government seeks to push it with an ulterior motive of… pic.twitter.com/PslpjWoRwM அரசியலமைப்புக்கு எதிரான இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அரசியல் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ள முதலமைச்சர், முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதாகவும் சாடியுள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.