TAMIL-NADU

நாளை உருவாகும் ‘டானா’ புயல்... எங்கு, எப்போது கரையை கடக்கும் தெரியுமா?... வெளியான அப்டேட்

வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘டானா’ என கத்தார் நாடு பெயர் சூட்டியுள்ளது. வங்கக்கடலில் நாளை ‘டானா’ புயல் உருவாகவுள்ள நிலையில் அதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ் 18க்கு பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு நேரடி பாதிப்பு வாய்ப்புகள் மிகக் குறைவு என்றார். ‘டானா’ புயல் வட ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கரையோர பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். கரையைக் கடப்பது எப்போது?: இதற்கிடையே, டானா புயல் கரையைக் கடக்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 24ம் தேதி (நாளை மறுதினம்) ஒடிசாவின் புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்றும், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் அதனால் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று எங்கெல்லாம் மழை?: இதற்கிடையே, புயல் காரணமாக இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. புளியமரத்து ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், வரதராஜபுரம் கிராமத்திற்குள் புகுந்தது. குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததால், 30க்கும் அதிகமான குடும்பத்தினர், அருகில் இருந்த கோவிலில் தஞ்சமடைந்தனர். இதனிடையே மதுரை சோழவந்தான் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, 50 ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. Also Read | “அரசியல் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்” - முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் கலங்கிய முதல்வர்! வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதேபோல், தஞ்சை மாவட்டம் நெடார், மானாங்கோரை, மாத்தூர், பசுபதி கோவில், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையில் எதிரில் வருபவர்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். திருவாரூரில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் விஜயபுரம் ரயில்வே பாலத்தில் கழுத்தளவுக்கு தண்ணீர் தேங்கியது. நாகையில் பரவலாக ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.