NILGIRIS

அந்நிய மரங்கள் எல்லாம் அவுட்... பாரம்பரிய நீலகிரியை உருவாக்கும் பணியில் வனத்துறை...

அந்நிய மரங்கள் எல்லாம் அவுட்... பாரம்பரிய நீலகிரியை உருவாக்கும் பணியில் வனத்துறை... நீலகிரியில் பசுமை புல்வெளிகளையும், சோலை மரங்களையும் மேம்படுத்தும் வகையில் அந்நிய மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் 60% வனப்பகுதிகளைக் கொண்ட ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் கற்பூர மரம், சீகை மரம், பைன் மரம் போன்ற வெளிநாட்டு வகை மரங்களும் உண்ணி, பார்த்தீனியம், லாண்டனா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட வெளிநாட்டுத் தாவர வகைகளும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1840களில் எரிபொருள் தேவைகளுக்காக நடவு செய்யப்பட்டது. இந்த அந்நிய மரங்கள் மலை மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதிப்பதாகவும், பெருமளவிலான நீரை உறிஞ்சி தனக்குள் வைத்துக் கொள்கிறது எனவும் நெடு நாட்களாகக் கூறப்பட்டு வந்தது. காலப்போக்கில் அதிக அளவில் இந்த அந்நிய மரங்கள், தாவரங்கள் வளர்ந்ததால் இயற்கையாகத் தோன்றிய நீரோடைகளும் வற்றத் தொடங்கியது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு எரிபொருள் பயன்பாடுகள் அதிகமானதால் அந்நிய மரங்களின் தேவை குறைந்துவிட்டது. பூர்வக்குடி மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்து புல்வெளிகள் இந்த மரங்களாலும், அந்நிய செடிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக்கோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 350 ஹெக்டேர் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்நிய மரங்கள் மற்றும் தாவரங்களை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அந்நிய மரங்களை அகற்றி மலை மாவட்டத்திற்கு நீர் நிலையை உருவாக்கக்கூடிய பாரம்பரிய மரங்களை நடவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு சோலைக் காடுகளைப் பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறைக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதையும் படிங்க: பார்வையற்றோருக்கு வழிகாட்டும் கருவி… அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு… இதுகுறித்து தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரஞ்சித் குட்டன் கூறுகையில், “முன்பெல்லாம் மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததால் அதிக அளவில் எருமைகளை வளர்த்து வந்தோம். தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ளதாலேயே எருமைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்களால் கிராமப் பகுதிகளுக்குள் உலா வரும் வன உயிரினங்களால் மக்கள் அதிக அளவில் சிரமம் அடைகின்றனர். அதனால் புல்வெளிகள் அதிகம் உருவாகும் வகையில் மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க அரசு வழி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.